Thursday, September 10, 2015

உரமாகும் பார்த்தீனியம்!



பார்த்தீனியம் செடியைக் கட்டுப்படுத்தி உரமாகப் பயன்படுத்தும் முறைகள் குறித்து மேல்புறம் வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குநர் என். தமிழ்குமார் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பார்த்தீனியம் நச்சுக் களைச் செடி நன்கு உயரமாக வளர்ந்து ஆழமாக பரவும் வேர்களைக் கொண்டது. இதன் இலைகள் கேரட் இலைகளைப்போல இருக்கும். செடிகளின் நுனிப்பகுதியில் ஏராளமான வெள்ளை நிறப் பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். ஒவ்வொரு பூவிலும் ஏராளமான விதைகள் இருக்கும். விதைகள் காற்று, நீர் மூலம் பரவி முளைவிடும். இவை மழைக்காலத்தில் நன்கு வளர்ந்துவிடும்.
 
பொதுவாக சாலையோரங்கள், புறம்போக்கு நிலங்கள், தண்டவாளப் பகுதி, ஆற்றங்கரையோரம், கழிவுநீர் வாருகால், விளைநிலங்களில் அதிகம் காணப்படும்.
 
சுகாதாரக் கேடு: பார்த்தீனியத்தில் உள்ள "செஸ்கிடெர்பின் லேக்டோன்' என்ற வேதிப் பொருளால் மனிதர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, அரிப்பு, தோல் வியாதி, கண் வீக்கம், ஆஸ்துமா போன்ற உபாதைகள் ஏற்படும்.
 
விளை நிலங்களில் பாதிப்பு: பார்த்தீனியம் செடிகளின் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் உள்ள "பினாலிக் அமிலம்' மற்ற செடிகளின் வளர்ச்சியைத் தடுத்து, அழிக்கும் வல்லமை கொண்டது. ஒரு செடியிலிருந்து 624 மில்லியன் மகரந்தத் தூள்கள் வெளிவந்து, காற்றில் பரவி இவை வளர்ச்சியடைவதுடன், மற்ற செடிகளின் பூக்களுக்குள் பரவி அவற்றின் காய்பிடிக்கும் தன்மையைப் பாதிக்கும். விளைநிலங்களில் இச் செடியின் வளர்ச்சியால் 50 சதவீதம்வரை மகசூல் இழப்பு நேரிடும்.
 
செடிகளை பிடுங்கி அழித்தல்: பார்த்தீனியத்தை இளந்தளிர் பருவத்திலேயே அகற்றி எரித்துவிட வேண்டும். இச்செடிகளைக் கையால் பிடுங்கி அழிக்கும்போது கண்டிப்பாக கையுறை, முக உறை அணிய வேண்டும். இதன் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்கலாம்.
 
சமுதாய நோக்குடன் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவர்கள் உதவியுடன் இச் செடிகளைப் பிடுங்கி எரிக்கலாம். மேலும், பூக்கும் பருவத்துக்கு முன்பும், மழைக்காலங்களிலும் அகற்றினால் இச் செடிகளின் பரவும் தன்மையைக் குறைக்கலாம்.
 
செவ்வந்தியை பயிர் சுழற்சி முறையில் பயிரிட்டு பார்த்தீனிய களையைக் கட்டுப்படுத்தலாம். அடர் அவரை, துத்திச் செடிகளை வளரச் செய்வதன் மூலமும், பார்த்தீனியம் அல்லாத காய்ந்த பிற செடிகளை நிலப்பரப்பில் பரப்பி வைப்பதன் மூலமும் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்தலாம்.
 
உயிரியல் முறை: சைகோகிராமா பைகலரோடா என்ற மெக்சிகன் வண்டும், அவற்றின் புழுக்களும் பார்த்தீனியம் செடியின் இலைகள், பூக்களைத் தின்னும். எனவே, இந்த வண்டுகளை மழைக்காலங்களில் குறிப்பாக, ஜூன் முதல் பிப்ரவரி வரை பார்த்தீனியம் செடிகளில் இட வேண்டும்.
 
களைக் கொல்லிகள்: ஒரு லிட்டர் நீரில் 20 கிராம் உப்பு, 2 மில்லி டீப்பால் சேர்த்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்து பார்த்தீனியம் செடிகளைக் கட்டுப்படுத்தலாம்.
 1
லிட்டர் நீரில் கிளேபோசேட் 41 நக என்ற களைக்கொல்லி 15 மில்லி, 20 கிராம் அம்மோனியம் சல்பேட் உரம், சோப்புக் கரைசல் 2 மில்லி கலந்து கைத் தெளிப்பானால் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
 2, 4
டி சோடியம் உப்பு 80 ரட 10 கிராம், 10 லிட்டர் தண்ணீர், அம்மோனியம் சல்பேட் 20 கிராம், 20 லிட்டர் தண்ணீர், சோப்புக் கரைசல் 2 மில்லி, 2 லிட்டர் தண்ணீர் என்ற அளவுகளில் கைத் தெளிப்பான் மூலம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இவற்றை, பூக்கும் பருவத்துக்கு முன்பு செய்ய வேண்டும்.
 
மண்புழு உரம் தயாரித்தல்: பூக்கும் முன்னர் பார்த்தீனியம் களைகளைச் சேகரித்து, அவற்றை 5-10 செமீ அளவில் நீளவாட்டில் நறுக்கி 10 செமீ சுற்றளவில் 10 செமீ உயரத்துக்கு கீழிருந்து 5 அடுக்குகளாக அடுக்கி, அதன் மேல் 10 சதம் மாட்டுச் சாணத்தைக் கரைத்துத் தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாள்கள் மக்குவதற்கு வைக்க வேண்டும். 45 முதல் 60 நாள்களில் மண்புழு உரம் கிடைக்கும்.
 
கம்போஸ்ட் தயாரித்தல்: இச் செடியை பூக்கும் முன்னர் ஒரு டன் அளவுக்கு சேகரித்து 7 செமீ முதல் 10 செமீ வரை சிறு துண்டுகளாக நறுக்கி, வடிகால் வசதி, நிழல் உள்ள உயரமான இடத்தில் ஒரு மீட்டர் உயரத்துக்கு 10 செமீ அடர்த்தியாக அடுக்குகளாக பரப்ப வேண்டும். இதன் மீது 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண மருந்து, 5 கிலோ யூரியாவைக் கரைத்து பரவலாக தெளிக்க வேண்டும். ஈரப்பதம் 50 முதல் 60 சதம்வரை இருக்குமாறு பராமரிக்க வேண்டும். இது, 40 முதல் 45 நாள்களில் கம்போஸ்டாக கிடைக்கும். இது, பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கி.




No comments:

Post a Comment