Tuesday, September 29, 2015

ஆர்கானிக் சான்று


இயற்கை வேளாண்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட முறைகளைத் தவறாது கடைபிடித்து நிலைத்த, நீடித்த வரவு பெற எடுக்க வேண்டிய எளிய செலவு குறைந்த உத்தியே. இதில் கோடை உழவு செய்தல், இயற்கை உரங்கள் தொழுஉரம், மண்புழு உரம், பண்ணைக்கழிவுகள், பிண்ணாக்கு வகைகள், தழை உரம், அசோலா, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, ரைசோபியம் பயன்படுத்துவது அவசியம். உயிரியல் பூஞ்சாண மருந்துகளாக சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா விரிடி பயன்படுத்தி விதை நேர்த்தி செய்தல், கலப்புப் பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி மற்றும் பொறிப்பயிர் சாகுபடி செய்யலாம்.
உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இயற்கையான முறையில் தயார் செய்யக்கூடிய ஊட்டச்சத்துக் கலவைகளான பஞ்சகவ்யா, அமிர்தக் கரைசல், மீன் அமிலம், முட்டை அமிலம், சுரப்பு மோர் கரைசல், ஜீவாமிர்தம், வேம்பு அஸ்திரம் பிரம்மாஸ்திரம், கன ஜீவாமிர்தம் மற்றும் பிஜாமிர்தம் ஆகியவற்றை பயிருக்கு கொடுத்து மகசூலை அதிகரித்து நல்ல காசு பார்க்கலாம். கால்நடைகளை பண்ணையில் பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தீவனமும் பண்ணையிலேயே விளைந்ததாக இருக்க வேண்டும்.
அங்ககச் சான்று பெற தனியே விண்ணப்ப படிவம் உள்ளது. பண்ணையில் பொது விவரக் குறிப்பு வரைப்படம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை முடிவுகள், ஆண்டு பயிர் திட்டம் துறையுடனான ஒப்பந்தம் நிரந்தர கணக்கு எண். (பான் கார்டு) ஆகிய விபரங்களுடன் 3 ரகங்களில் உரிய விண்ணப்பத்துடன் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தனி நபராக இருப்பின் சிறு குறு விவசாயிகள் ரூ.2,700/- மற்றும் இதர விவசாயிகள் ரூ.3,200/- கட்டணமாக விதை சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்குநர், கோவை-13ல் கட்டலாம். இதனை நம் குழு பதிவுக்கு ரூ.7,200/- மற்றும் வணிக நிறுவனமாக இருப்பின் ரூ.8,400/- கட்ட வேண்டும். விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்குநர் 1424-ஏயில் தடாகம் சாலை, கோவை-13ல் மேலும் விபரம் பெறலாம். மேலும் தோட்டக்கலைப்பயிர் சாகுபடியில் சந்தேகமா? 98420 07125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
-
 டாக்டர் பா.இளங்கோவன்,
தோட்டக்கலை உதவி இயக்குநர்,
உடுமலை, திருப்பூர்.


No comments:

Post a Comment