Tuesday, July 25, 2017

50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்


பிள்ளை போல் வெள்ளை நிறத்தில் சிரிக்கும் சம்பங்கிப் பூக்கள் தான் என்னை ஜெயிக்க வைக்கிறது,'' என்கிறார், திண்டுக்கல் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைசெல்வன். இரண்டு ஏக்கர் நிலம் இருந்தாலும் 50 சென்ட் பரப்பளவில் நில மூடாக்கு முறையில் சம்பங்கி பயிரிட்டுள்ளார். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு உயிர் தரும் இப்பயிரின் மகத்துவம் குறித்து கலைசெல்வன் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு 150 கிலோ நில மூடாக்கு சீட் வேண்டும். இந்த சீட் கிலோ 230 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை செலவாகும். நீளப்பாய் போன்று இருக்கும் இதன் நடுவில் துளையிட்டு சம்பங்கி கிழங்கு நடவேண்டும். ஏக்கருக்கு 800 - 900 கிலோ கிழங்கு தேவைப்படும்.சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் 16 அடி இடைவெளியில் 'ஸ்பிரிங்ளர்' முறையில் தண்ணீரை தெளிக்கலாம்.15 நாட்களில் முளை வந்து விடும். 65 முதல் 90 நாட்களில் பூ வர ஆரம்பிக்கும். ஏக்கருக்குஅதிகபட்சமாக 60 கிலோ பூக்கள் கிடைக்கும். சூழ்நிலையைப் பொறுத்து 3 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும். 5 மாதங்களுக்கு பிறகு பூக்கள் தினமும் கிடைக்கும். காலை வேளையில் மார்க்கெட்டிற்கு பூ அனுப்புவது நல்லது.அதிகாலை 4:00 மணிக்கு பூ எடுக்கலாம். காலையில் பூக்கும் பூ வெள்ளையாக பளிச்சென்று இருக்கும். பூக்களை பறித்து தண்ணீரில் லேசாக நனைத்து கட்டி வைத்து திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு அனுப்புவேன். ஒரு நபர் ஒரு மணிநேரத்தில் 10 கிலோ பூக்கள் பறிக்கலாம். வைகாசி, ஆனியில் கிலோ 500 ரூபாய் வரை விலை கிடைக்கும். சீசன் இல்லாத நேரத்தில் கிலோ 20 ரூபாய் தான். ஆண்டுக்கு 52 முகூர்த்தங்கள் மூலம் லாபம் இருப்பதால், ஏக்கருக்கு சராசரியாக 2 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். என்றார். 
தொடர்புக்கு: 97877 87432
எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை.

Source : Dinamalar

No comments:

Post a Comment